ஒரு தூசிப் புயல்...
மழை மருவி ,
பிழைத்துப் போன ஜாதகம் போல்...
நிலை மறந்து வறண்டு போன நிலம் என
அடரா முள் பற்றை குத்த
வளித்தும் ஓர் நிழல் தேடும் எண்ணக் கிடங்கு!
வனம் வளர்த்த வசந்த காலம் அது.
மலர் பறித்த சிரிப்பு,
அப்பப்பா...!
இறகு விரிக்கும் எப்பட்சியும்
உறவாட மறக்கா காடது!
கண் கூசப் பருத்துப் போன சூரியன் இப்பொழுது...
கண்ணையும் பறித்துக் கொண்டால்
என்?
வன்முறை தான் காண்கிறேன்!
ஆம்!
இயற்கைக்குக் கூட வன்முறை பழகிப்போய்விட்டது!
தூர தேச அலைகள் இங்கு வந்து
தொட்டுச் செல்வதென,
ஏக்கங்கள் சில் என்று...
எங்கோ ஒரு விட்டில் புற்றுக்குள்
ஒரு குறல் ஒழிந்துகொண்டு!
கிள்ளிக் கிள்ளி
என்னை வா என்னும்,
எண்ணப் பிம்பம்.
நிசப்தத்தில் ஓடுமா உயிர்?
துடிதுடிக்கும் ஒரு இருதயம் வேண்டாம்?
நாடி நாளச் சந்திப்பின் அர்த்தம் மெய்ப்பட வேண்டாம்?
உயிர் சரிந்து,ஆவி சிதைந்து
புதையுண்ட என்
உருவ சுவாலை.
புயல் பறந்த சூனியக் காட்டில்...
புதைந்தது -வெறும்
'புதைந்தது' தானோ?
இருளைக் கணக்கிட்டு
விதியில் உரசிப் பார்த்து,
இன்னொரு
பஞ்சாங்கம் புதிதாய் எதற்கு?
புயலில் மாண்டு
புழுவென ஓடும்
இழிவோர் உடலுக்கு!
மணல் மூடி மாதமாகியும்
சுழல் காற்று தாண்டிப் போயினும்
கருவுள் சுருண்டு சிஸுப் பயிற்சி?
என்ன,
மீண்டும் பிறக்கவா?
இருளில் இருக்கும் சுக மௌனம்,
மறு பிறவியில் கேட்குமா ?
அல்லது,
ஏலவே என்னை அடித்த
அரக்கப்
புயல் கூட மறந்து
போகுமா?
கொந்தளித்த திசுக்
குமிழ்கள் ,
சோக ஆற்றின் ரத்தக்
கரைகள்,
சோர்ந்து போனால் போகட்டும்
என்று
மீண்டொரு பிறப்பு
எதற்கெனக்கு?
மணலுக்குள் இருக்கும் பொறுமை
மறுபடி
ஜீவனிழக்கட்டும் என,
சரித்துவிட்டா மேல் எழ நான்?
மீண்டும் நானெழுந்து
மாண்டு நாரிழக்க
மீண்டும் ஓர் ஜென்மம்
நானே எதற்கெடுக்க?
மேலும் எழா
கீழும் தொடா
புதைந்துண்ட
புதிய தோற்றம்,
பிணமும் அல்ல,
உடலும் அல்ல
உரிமை சொல்லா உருவம் இது!
மணலில் ஒரு புதையல் தான் நான்!
மணல்ப் படுக்கையின்,
மௌனம் இறக்கும் போது!
No comments:
Post a Comment