Monday, 23 October 2017

Thank you Dinamani




வான வேடிக்கை: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 23rd October 2017 05:26 PM  |   அ+அ அ-   |  
அவள்
பார்க்கும் வேடிக்கைகள்
எனக்குள் பல வான வேடிக்கை
பாய்ச்சிய நாட்கள் அவை...
யாழின்
முன்றில்களில்
யாருமே கால் வைக்க
முயலா!
கும்மிருட்டு
தீபாவளிகளுக்குள்
குருட்டு
மின்மினி வேடிக்கை
காட்டிற்று!
விளக்கே இல்லாமல்
வேடிக்கை
பார்த்திருந்தோம்!
வெளிச்சம் எல்லாம்
கூரை பிய்த்துச் செல்லும் போது!
இராவனன் தேடும்
கனல்கள்?
இரவும் பகலும்!
தோட்டாவில் கழிந்தன இரவுகள்!
பட்டாசில் ஆசையை
தோற்கடித்த,
பஜனைகளில் பதறிக்கொண்டு!
யாழில்,
விளக்கேற்றும்
சிப்பாய்கள்,
விரும்பிப் பார்க்க
சிறு குழந்தை -அது
என்ன
சீன வித்தை?
சிவப்பு மட்டுமே
கண்ட கண்கள்!
சிலிர்த்துக் கொண்ட
மயிர்களுக்குள்
ஓசையால் மிரட்டிய
குண்டின் அதிர்வு!
தீபாவளிகள்
கசந்து போயின!
தீண்டிட இனிப்பு
கரிந்து போயின!
அவள்
யன்னல்
திறக்கும்
நாட்களும்
மறந்திட...
கன்னி வெடிக்குள்
கலைந்து போன கனவுகள்!
பனை பற்றிட,
பசுமை மறந்த யாழ்!
புகை மிதக்கின்ற
இராவன தேச வானில்...
ஆகாசமெல்லாம்...
முழுக்க அக்கினி!
ஆசையே அவிழ்ந்து போனது,
திரி கொழுத்தி
தீபம் ஏற்றும்!
வேட்டுக்கள் இட்ட கோலம்
சுவரெல்லாம் தீபக் கோலம்!
தோட்டாத் துழைத்த
எதிர்காலம்!
தொலைந்து போனவன்
அவளுக்குள்,
திரும்பி மீள முன்,
தொலைந்து விட்டாள்!
அவளைத் தேடி...
குடிலுக்குள்
சுருண்டு பதுங்கி!
அடைத்துக்கொண்ட
நெஞ்செல்லாம்
அதற்குள்!
நான்
யன்னல் திறக்க,
கவசமிட்டுத் தான்
மன்மதனே வந்து
சென்றான்!
இன்று ,
ஏற்றுகின்ற தீபம்
அன்று பெரு நெருப்பாய்!
இழந்து விட்ட
எல்லாமே விளக்கைக் கொண்டா
மீட்டுக்கொள்வேன்?
தோற்றுப் போன - என்
முதல்க் காதல்!
பார்வை பறித்த
அவள்
யன்னல்...
யாழில் தவிக்கிறது -என்
யாதுமறியா உள்ளம்!
அந்த,
விளக்கேற்றிய
அவள்
கரங்களும்-நான்
விரும்பிப் பார்த்த
வான வேடிக்கைகளும்...
மீண்டும் நாடும் மனது!
இங்கே,
யாழில் மிதக்கும்
ஆசைகளை முடிச்சில் கட்டி
யாசிக்கின்றவன்
தீபம் என
நான் நெருங்க,
தீப்பொரி கடித்துப் புண்ணானேன்!
தொடக்கமே இல்லா
ஓர்
கதையின்,
காத்திருக்கும்
கதா நாயகன்...
அவள் இன்று
தீபம் ஏற்றும்
திசை தேடி...
யாழ் மீட்டும்
யாசிக்கும் உள்ளம்...

No comments:

Post a Comment